Friday, August 10, 2012

அவளும், அவள் செல்லக்குட்டியும்..!


இருள் விலகுகிற நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை..! எத்தனையோ நாட்கள் இந்த அலுவலக வாயிலை கடந்து சென்றதுண்டு. இன்று அதிகாலை அலுவல் முடிந்து நண்பர்களிடம் விடை பெற்று நான் என் அலுவலக வாகனங்கள் நிற்குமிடம் தேடி வெளியே வந்தேன்..!இருள் அடர்த்தியாக இருப்பதாய் தோன்றியது..! அங்கும், இங்கும், எங்குமாய் மனிதன் ஜீவன்களின் அசைவுகள் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பிக்கொண்
டு பாயும் வாகன படையெடுப்பு ஆரம்பமாகவில்லை..!

நான் மெதுவாக நடக்க தொடங்கினேன்...! வாகன கூடத்தில் நடமாட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே இருந்தது. முகங்கள் தெரியுமளவுக்கு வெளிச்சம் பரவத் தொடங்கவில்லை.. இருப்பினும் மங்கிய மஞ்சள் நிற சோடியம் மின் விளக்குகள் எங்களை மொய்த்துகொண்டுதானிருந்தது..!

அங்கிருக்கும் வாகன கண்காணிப்பாளரிடம் என் வாகன என்னை கேட்டறிந்தபின், வாகனத்தை நோக்கி மெல்ல நடக்கலானேன். அப்போதுதான் அந்த நாய்க்குட்டியின் அசைவை கவனித்தேன்..! எங்கிருந்தோ என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வருவதாய் தோன்றிற்று..! ஒரு கணம் யோசித்தேன். கண் திறந்ததும் தள்ளாடியபடி நடமாடத் தொடங்கும் பருவம் தானிருக்கும்..! ஆனால், தனக்கு இருப்பது நான்கு கால்கள் அல்ல நாற்பது கால்கள் என்பது போன்றதொரு வேகத்தில் என்னை நோக்கி வருவதாய் கண்டேன்.

நாய்கள் மீது எனக்கு பெரிதாக ஒரு பற்று இருப்பதாக நான் அறியவில்லை. என் வீடு அருகேயுள்ள சில நாய்கள், அவற்றை கடக்கும் போது குறைபதுவுண்டு..அப்போது அவற்றின் மீது கல்லெறிந்தும் இருக்கிறேன்..! என் அலுவலக வளாகத்திலே என் நண்பர்களுடன் இடைவேளைபோது சில நாய்களுக்கு நாங்கள் உண்ணும் தின்பண்டங்களை பகிர்ந்தளித்த ஞாபகமும் உண்டு.. மற்றபடி நாய்களுக்கும் எனக்கும் பெரிதாக பாசப்பினைப்பு இருந்தது கிடையாது..!

ஆனால், இப்போது ஒரு நாய்க்குட்டி எங்கிருந்தோ இருட்டிலிருந்து இவ்வளவு கூட்டத்தில் என்னை நோக்கி வருவதைப்போல் கண்டேன்..!ஒரு நொடி பொழுதில் என் மனம் அங்கிருந்து நகர்ந்து பொய் விடும்படி நினைத்ததுவும் உண்மை..! அதை தான் என் மூளையும் உத்தரவிட்டது..!

என்னவோ ஒரு சிங்கம் என்னை நோக்கி பாய்ந்துவருவதை போல் நான் அங்கிருந்து நகர்ந்து ஓடினேன்..! பின் அந்த நாய்க்குட்டி என்னிடம் வருகிறதா என தெரிந்துக்கொள்ள திரும்பி பார்த்த நான், இருட்டில் இருந்து ஓடி வெளிச்சம் கண்டது அந்த நாய்க்குட்டி.. ஆனால் வெளிச்சதில்லிருந்து கொண்டே இருட்டை கண்டது நான் மட்டுமே என உணர்ந்தேன்..!

வேகமாக ஓடி வந்த நாய்க்குட்டி, என்னை பார்த்து வரவில்லை..என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து ஓடி வந்தது என்பதை நான் புரிந்துக்கொண்டேன்..! வந்த வேகத்தில் அந்த நாய்க்குட்டி, நின்றுகொண்டு தன் இரு கைகளை நீட்டி அணைக்க காத்திருந்த அந்த பெண்ணின் கால்களை பற்றி அவள் மேல் தாவி ஏற முயல..அந்த பெண் அந்த நாய்க்குட்டியை தன் சிறு குழந்தையை தூக்குவதுபோல அழகாக, லாவகமாக தூக்கி கொஞ்சிகொண்டிருந்தாள்.

அதுவரை ஏதோ ஒரு தெருநாய் குட்டியாய் என் கண்களுக்கு காட்சியளித்த அந்த நாய்குட்டி.. இப்பொழுது, பிறந்த குழந்தை யாருடைய அறிமுகமும் இல்லாமல், தன் அருகே கிடத்திவைக்கப்பட்டுள்ளவள் தான் தன்னுடைய அன்னை என்றறிந்து அவளின் ஸ்பரிசத்துடன், அவளின் வாசத்துடன் அவள் மடிதேடி ஒட்டிக்கொள்ளும் விந்தையாய் மட்டுமே தெரிந்தது..! இது அந்த பெண்ணால் அந்த நாய்குட்டிக்கு கிடைத்த ஸ்பரிசம் இனிதே விளக்கியது..!

அவள் கைகளில் அந்த நாய்க்குட்டி தவழ்ந்த போது.. அதன் தத்தளிப்பும், உலகமறியாத குழந்தையும் வெகுளித்தனமும் காண முடிந்தது..! அந்த சிறு நாய்க்குட்டியின் உருவம், அதன் மடிந்து தொங்கும் காதுகளும், ஒளி புகுந்து வெளிப்படும் கண்களும் வெகுவாக கவர்ந்தது..! கண நேரத்தில்.. அந்த பெண்ணால் அந்த நாய்க்குட்டியும், அந்த நாய்குட்டியால் அந்த பெண்ணிற்கும் நடந்த அன்பு பரிமாற்றம்.., நான் மட்டுமல்லாது என்னை போல் பலரும் கூடி நின்று அந்த பாசப்பகிர்வை பார்த்துக்கொண்டிருந்தோம்..!

நாய் உடம்பின் மேலே வந்து ஏறுவது என்னால் சகித்துக்கொள்ள முடியாத கஷ்டம் என்று என்னை போல் நினைத்துகொண்டிருந்த பலரும் இன்று நினைத்திருப்போம்..ஒரு நாய் நம்மிடம் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்தக்கூட நாம் தான் அதற்கு கற்றுதருகிறோம்..!இன்னபடித்தான் செய்வேன் என்று அது சொல்வதில்லை.. அப்படி இருப்பின், எந்த காரணத்தினால் இந்த சிறிய உருவம் கொண்ட ஜீவனிடம் இருந்து அந்த நட்புறவை நாம் கற்றுக்கொள்ள கூடாது என என் உள்மனம் ஓங்கி அறைந்தது...!

உண்மையில், நாய் என்பது ஒரு பயங்கரமான உயிர் தான்..!ஆனால், எந்த அளவுக்கு அதன் நலனில் நாம் பொறுப்பு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நம்மிடம் சீரான அளவில் பாசத்தை வெளிப்படுத்தும் என்பதை, அந்த பெண்ணும் அவள் செல்லக்குட்டியும் எனக்கு உணர்த்த தவறவில்லை! அங்கே நடந்தவற்றை நினைத்து கொண்டே என் வாகனத்தை தேடி மெல்ல நகர்ந்தேன்..!

மீண்டும் ஒருமுறை முதல் வரி..! இருள் விலகுகிற நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை..! என் மனதிலும், வானத்திலும்.. இருள் மெல்ல விலகதொடங்கி இருந்தது!!

No comments:

Post a Comment